பூம் பூம் மாடுடன் வீடு வீடாக சென்று நாதஸ்வரம் வாசிக்கும் இசைக் கலைஞருக்கு ஜிவி பிரகாஷ் தனது இசையில் வாசிக்கும் வாய்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜிவி பிரகாஷ். இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என்று பல திறமைகளை கொண்டுள்ள ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். வணக்கம் டா மாப்பிள்ளை, ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், ஜெயில், 4ஜி, பேச்சுலர், காதலிக்க யாருமில்லை, காதலை தேடி நித்யா நந்தா, அடங்காதே என்று ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞரின் வீடியோவை பகிர்ந்து, இந்த வீடியோவில் நாதஸ்வரம் வாசிப்பவர் யார் என்று தெரிந்தால் தனக்கு தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். மேலும், அவர் திறமைசாலி, பாடல் பதிவுக்கு பயன்படுத்திக் கொள்வேன், வாசிக்கும் பதிவுகளும் துல்லியமாக இருக்கின்றன என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து நெட்டிசன் ஒருவர் நாதஸ்வரம் வாசிப்பரின் பெயர் நாராயணன் என்றும், அவரது மொபைல் எண்ணையும் பகிர்ந்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வீடு வீடாக பூம் பூம் மாடுடன் சென்று நாதஸ்வரம் வாசிக்கும் அந்தக் கலைஞருக்கு தனது இசையில் வாசிக்கும் வாய்ப்பளிப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 20219 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வந்த விஸ்வாசம் படத்தில் இடம் பெற்றிருந்த கண்ணான கண்ணே என்ற பாடலை திருமூர்த்தி என்ற பார்வையற்ற இளைஞர் பாடியுள்ளார். இது அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அந்த இளைஞர் திருமூர்த்திக்கு இசையமைப்பாளர் டி இமான் தனது இசையில் வெளிவந்த சீறு பட த்தில் உள்ள செவ்வந்தியே என்ற பாடலைப் பாட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
If we could find this person . We could use him for recordings . So talented and good precision on the notes … talented https://t.co/79LcQrrZpj
— G.V.Prakash Kumar (@gvprakash) May 22, 2021