பருத்திவீரன் படத்தில் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் பாட்டியின் மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் திரைக்கு வந்த பருத்திவீரன் படத்தின் மூலமாக சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்திற்கு 2 தேசிய விருதுகளும், 6 பிலிம்பேர் விருதுகளும், 2 தமிழ்நாடு மாநில விருதுகளும் கிடைத்தது. இந்தப் படத்தில் கார்த்தியின் அப்பத்தாவாக மங்காயி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பாட்டி பஞ்சவர்ணம்.
கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த பஞ்சவர்ணம் பாட்டி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.