மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குவேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜகமே தந்திரம் படம் வரும் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நேற்று இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.
இந்நிலையில் டுவிட்டர் ஸ்பேசில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் உள்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். அப்போது பேசிய தனுஷ் கூறுகையில், ஜகமே தந்திரம் படத்தின் ரிலீசுக்காக ரொம்ப நாட்களாக காத்திருக்கிறோம். சுருளி கதாபாத்திரம் ரொம்பவே எனக்கு பிடித்திருக்கிறது. ஜகமே தந்திரம் படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சொல்லி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூக்கு தொல்லை கொடுத்து வருகிறேன். எனது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் பிடித்த படமாக ஜகமே தந்திரம் இருக்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நானும், கார்த்திக் சுப்புராஜூம் ரஜினியின் தீவிர வெறியர்கள். தலைவர் ரஜினிகாந்தைப் போன்று ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறேன். இதனை கார்த்திக் சுப்புராஜூம் ஒப்புக் கொண்டுள்ளார். இசையமைப்பாளராக வர வேண்டும் என்ற ஆசையெல்லாம் இப்போதைக்கு இல்லை. கொரோனா முற்றிலும் சரியான பிறகு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.
ஹாலிவுட்டில் உருவாகி வரும் தி கிரே மேன் பட த்திற்காக ஒரு மாதம் ஆக்ஷன் காட்சிக்காக பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன். தி கிரே மேன் படம் முடிந்த பிறகு இன்னும் இரு வாரங்களில் இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளேன். இன்னும் 3 வருடங்களுக்குப் பிறகு படம் இயக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக பா பாண்டி என்ற படத்தை இயக்கியுள்ளார்.